Sunday, April 8, 2012

தமிழ் ஈழம் 110 வருடக்கணக்காக நடந்து வரும் ஒரு போராட்டம்

ச. வெ. ரா
Issue 4 : எனது ஜன்னல் வழியே இலங்கை @TN :(Ref : Issue 3 dated 1/4/12 , Issue 2 dated 18/3/12 & Issue I dated 15/3/12)

ஆங்கிலேயர்கள் 1948 பிப்ரவரி 4-இல் இலங்கைக்கு சுதந்திரத்தை அளிக்கும் முன்னர் இலங்கையில் தமிழர்கள் போராட்ட வரலாறு உள்ள காலக்கட்டம் நோக்கி செல்வோம்:

இலங்கைத் தமிழர்களின் அமைப்புகளின் தொடக்கமாக, திரு.ஆறுமுக நாவலரால் அந்நிய சக்திகளிடமிருந்து சைவத்தைக்காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்ட "சைவபிரகாச சபை' என்னும் அமைப்பு 1853-இல் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் தமிழர் உரிமைகளைப் பற்றியும் திரு.ஆறுமுக நாவலர் பேசினார். இந்த சபை இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கிலும் குறிப்பாக கொழும்பிலும் களம் கண்டது. வெள்ளையரின் சட்ட நிரூபண சபையில் இன்னார்தான் தமிழர் பிரதிநிதியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலைமையையும் திரு.ஆறுமுகநாவலர் எடுத்தார். சட்ட நிரூபண சபைக்கு திரு.பொ. இராமநாதன் நியமனத்திற்காக ஆளுநருக்கு எழுதினார். இதன்மூலம் 50 ஆண்டுகள் தமிழர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு திரு.பொ.இராமநாதனுக்கு கிடைத்தது.

ஆனாலும் திரு.பொ.இராமநாதன் ஆறுமுகநாவலரின் எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிக்கவில்லை , மாறாக, திரு.பொ.இராமநாதன் இலங்கை தேசிய சங்கத்தைநிறுவி ((Ceylon National Association)) அதன் தலைவரானார். 13 ஆண்டுகள் பதவிவகித்த திரு.பொ.இராமநாதனுக்குப் பிறகு அவரது சகோதரர் பொ.குமாரசாமி வந்தார். இவரின் பதவிக்காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு புகைவண்டி இருப்புப் பாதையை அதிகரிக்கப் பெரிதும் முயன்றார்.

1905-ஆம் ஆண்டு இறுதியில் "யாழ்ப்பாணச் சங்கம்' என்ற பெயரில் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதுகுறித்து1906-இல் வெளியான "ஹிந்து ஆர்கனி'ல், ""தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களை அரசின் முன்வைத்துதீர்க்கும் விதமாக தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தது."

ஹிந்து ஆர்கன்' மற்றும் அதன் தமிழ் பதிப்பான "இந்து சாதனம்' மட்டுமே தமிழ்த் தேசியத்தை வளர்த்தெடுக்கும் விதமாகக் "நாம் ஒன்றிணையவில்லை. நாம் பிரிந்து நிற்கிறோம். மறுபடியும் ஒற்றுமையை ஏற்படுத்துவது மிகவும்கடினம். ஒற்றுமையின்மை காரணமாக ஏற்பட்ட அழிவின் பாதிப்புகளினால் நாம் வருந்துகின்றோம். ஒரு காலம் பெருமையுடன் நாம் ஆண்ட நாட்டை அந்நியருக்கு விட்டுக்கொடுத்து விட்டோம். எமது நாட்டின் பிரச்னைகளைஎமது மக்கள் ஒன்று கூடிக் கலந்துரையாடுவது கிடையாது. எமது சுதந்திரங்கள் யாவற்றையும் நாம் சரணளித்துவிட்டு, சித்த சுவாதீனம் இழந்தவராய் நிற்கிறோம்'' என்ற பாங்கில் கட்டுரைகள், தலையங்கங்களை எழுதின.இவ்வகை எழுத்துக்கள் மக்களை எழுச்சியுறச்செய்தன.

யாழ்ப்பாணத் தமிழர் சங்கத்தில் அங்கம் வகித்தவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் கும்பகோணம் கல்லூரிமுன்னாள் ஆசிரியர் திரு.ஜேம்ஸ் ஹென்ஸ்மன். இவர் தலைவராகவும், வழக்கறிஞர்கள் திரு..ஹோமர் வன்னியசிங்கம், மற்றும் திரு..எஸ்.காசிப்பிள்ளை உப தலைவர்களாகவும் இருந்தனர். திரு..ஜேம்ஸ் ஹென்ஸ்மன் தலைசிறந்த ஆங்கிலப்பேராசிரியர் ஆவர். திரு..ஹென்ஸ்மனுக்கு இரு புதல்வர்கள். அவர்கள் இருவரும் சென்னையிலேயே பணி புரிந்தனர். அவர்களும் திரு.ஹென்ஸ்மன் என்றே அழைக்கப்பட்டனர். அந்த ஹென்ஸ்மனில் ஒருவர் சென்னைமாநகராட்சியின் தலைமைப் பொறியாளராக இருந்து அரும்பணியாற்றிய காரணத்தால், அவரது பெயரில் தியாகராயநகரில் ஹென்ஸ்மன் சாலை என்று ஒரு சாலைக்குப் பெயரிடப்பட்டது. இன்று அந்த சாலை தான் கண்ணதாசன் சாலை என்று பெயர் மாற்றம் பெற்றிருக்கிறது.

பின்னர் சமூக சீர்திருத்த சங்கம் (1906), ஐக்கிய நாணயச்சங்கம் (1913), யாழ்ப்பாண கூட்டுறவுச் சங்கம் (1918),திருகோணமலை மாதர் ஐக்கிய சங்கம் (1920), மட்டக்களப்பு சங்கம் (1920). முல்லைத்தீவு மகாஜன சங்கம் (1921)ஆகியவை உருப்பெற்று யாழ்ப்பாணச் சங்கத்துக்கு உதவியாகவும், ஆலோசனை கூறுகிற அமைப்புகளாகவும்அமைந்தன. 1921 ஆகஸ்டு 15-ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்ட தமிழர் மகாஜன சபை, தமிழர்களின் பிற்காலஅரசியல் ஆசைகளை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்தது.

இந்த காலகட்டத்தில் 1939 ஆம் ஆண்டு கலவரம் காரணமாக அன்றையே இலங்கையை ஆண்ட பிரிட்டிஷ் அரசு போக்குவரத்து அமைச்சர் நாலாயிரம் தமிழர்களை இந்தியாவிற்கு அனுப்புகிறார் . பிறகு இந்தியர் பிரச்னையைப் பேசுவதற்காக மகாத்மா காந்தி தனது தூதுவராக திரு.ஜவாஹர்லால் நேருவை இலங்கைக்குஅனுப்புகிறார் .

ஆனால், இந்தப் பிரச்னையில் பேச்சுவார்த்தை ஒரு தீர்வுக்கு வராமல் தோல்வி அடைகிறது. அப்போது திரு.நேரு பல்வேறு தொழில் துறைகளில் இருந்த இந்தியர்களை அழைத்து, இலங்கை இந்தியர்களுக்கான ஒரு காங்கிரûஸஉருவாக்கிக் கொள்ளும்படி அவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்.இதையொட்டி உருவானதுதான் இலங்கை இந்திய காங்கிரஸ். இது கொழும்பில் உருவாகிப் பின்னர் மலையகத்தில் அறிமுகமாகிறது. இது கட்சியோ, தொழிற்சங்கமோ அல்ல. திரு..நேரு வருவதற்கு முன் எஸ். தேசாய்தலைமையில் இருந்த இலங்கை இந்தியர் சங்கமும் திரு.வள்ளியப்பச் செட்டியாரின் தலைமையில் இருந்த இந்தியசேவா சங்கமும் இணைந்ததொரு அமைப்பாகும்.

ஆரம்பத்தில் சிங்களப் பேரினவாதம் இந்திய வணிகக் குழுவை வெளியேற்றுவதற்காக மட்டுமே முயற்சிகளைமேற்கொண்டது. அப்போது தென் கிழக்கு ஆசிய நாடுகளைப் போன்றே இலங்கையிலும் இந்திய வணிகநிறுவனங்களிலும், நிர்வாகத்திலும் தமிழர்களின் கை மேலோங்கி இருந்தது. ஆனால் இலங்கை இந்தியக்காங்கிரஸ் உருவானபின் சிங்களவர் மத்தியில் ஓர் அச்சம் வேரூன்றியது. இதனைத் தொடர்ந்து, இலங்கையை சிங்களவர் மயமாக்கும் கொள்கையைக் கடைப்பிடிக்க அவர்கள் ஆரம்பித்துவிட்டனர்

ஆங்கிலேயர்கள் 1948 பிப்ரவரி 4-இல் இலங்கைக்கு சுதந்திரத்தை அளித்தனர். அதருக்கு பின்னர் 1948~2009 காலகட்டத்து இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தை முன்று வகையாக பிரிக்கலாம்:

(i) 29 வருட இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனநாயகம் அரசியல் காலம் (29 years Democratic Struggle under S.J.V Selvanayagam ( 1948 ~1977))
(ii) 12 வருடபோராளி அமைப்புகள் காலம் (1977 ~ 1989) 12 years Emergence of Militant Groups ( 1977 ~ 1989)
(iii) 20 வருட யுத்த காலம் 20 years LTTE vs Srilankan Government Civil War (1989~2009)

இலங்கைத் தமிழரசுக் கட்சி 29 வருட ஜனநாயகம் அரசியல் காலம் :(29 years Democratic Struggle under S.J.V Selvanayagam ( 1948 ~1977))

மார்ச் 31 1898 பிறந்து , சிறந்த வழக்குறிஞர் ஆக தொழில் புரிந்து பின்னர் 1944 இல் தீவிர அரசியலில் இறங்கினார் திரு.சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் (S.J.V .Selvanayagam ). 1947 முதல் பின்பு இவரது மரணம் 1977 வரை யாழ்ப்பாணத்தில் இவரது வீடு, சுறுசுறுப்பாக இயங்கியது . இந்த முப்பது வருட காலகட்டத்தில் இலங்கை தமிழர் பிரச்சனைகள் இவரை சுற்றியே இருந்தது . இவரின் பிரதான சீடர் தான் திரு. அமிர்தலிங்கம் ஆகும்.திரு செல்வநாயகத்தால் 1949-இல் தொடங்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி , சிங்கள வெறிக்கும், இனவாதத்திற்கும், நேருக்கு நேர்நின்று எதிர்த்து பதில் கூறக் கூடிய வகையில் ஜனநாயக அரசியல் நெறியுடன் செயல்பட்டது.

தமிழர்களின் ஒட்டுமொத்தமான தேசிய இன உணர்வைப் பிரதிபலிக்கக்கூடிய வகையில் தமிழர்களுக்கு சம உரிமை கேட்டு இக்கட்சி தொடர்ந்து பல ஜனநாயக போராட்டங்களை நடத்தியது. மேலும் தனிச் சிங்கள மொழிச் சட்டத்திற்கு எதிராக 1956-இல் உடனுக்குடன் ஒரு மிகப்பெரிய சத்தியாக்கிரக இயக்கத்தை நடத்தி, பரவலான மக்கள் இயக்கங்கள் அனைத்தையும் கட்டி எழுப்பியது

இந்த எதிர்ப்பின் விளைவாகப் பணிந்த இலங்கை அரசாங்கம் கடைசியில் கட்சியின் தலைவர் திரு செல்வநாயகத்துடன் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இதுவே சரித்திரப் புகழ்பெற்றபண்டாரநாயக்கா~செல்வா ஒப்பந்தமாகும்*.

தனது தன்னலமற்ற தொண்டு, நேர்மை, தியாகம் ஆகியவற்றால், மாற்றுக்கட்சியினரின் நன்மதிப்பையும் .திரு செல்வநாயகம் பெற்றிருந்தார். 1976 நவம்பர் 19-ந்தேதி இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர் பிரச்சினை பற்றிப் பேசினார். அதுவே, பாராளுமன்றத்தில்திரு செல்வநாயகம் கடைசி பேச்சாக அமைந்தது. அவர் கூறியதாவது:- "தமிழ் மக்கள் இழந்த உரிமைகளை மீட்பதற்காக, நாங்கள் ஒரு காலத்தில் கூட்டாட்சி கோரினோம். ஆனால் கூட்டாட்சி மூலம், தமிழ் மக்களின் உரிமைகளை நிலை நாட்டுவது சாத்தியப்படாது என்பதை, கடந்த கால அனுபவங்கள் மூலம் உணர்ந்து கொண்டோம். இந்த அனுபவங்களின் அடிப்படையில்தான், தனியே பிரிந்து வாழ்வதுதான் சிறந்த வழி என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். இதைச் செய்யாவிட்டால், தமிழ் இனம் இழந்த உரிமைகளை ஒருபோதும் மீட்டுக்கொள்ள முடியாது.

திரு செல்வநாயகம் @1977 மரண கால நிகழ்வு பாருங்கள் அவரின் நன்மதிப்பு விளங்கும் . செல்வநாயகம் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் கிடைத்ததும், பல்லாயிர கணக்கான தமிழ் பேசும் மக்கள் மட்டுமில்லை,, அன்றையே சர்வ அதிகாரம் கொண்ட இலங்கை பிரதமர் திருமதி பண்டாரநாயகா, ஆஸ்பத்திரிக்கு சென்று திரு செல்வநாயகத்தைப் பார்த்தார். . அத்துடன், ஒரு ராணுவ ஹெலிகாப்டர் விமானத்தில், நரம்பியல் டாக்டர்கள் இருவரை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி, செல்வநாயகத்திற்கு சிறந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். விசேஷ மருந்துகளை சிங்கப்பூரில் இருந்தும், லண்டனில் இருந்தும் தருவிக்கச் செய்தார்.

அன்றையே எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு ஜெயவர்த்தனா, மலையகத் தமிழர்களின் தலைவர் தொண்டமான் மற்றும் பல "எம்.பி.''க்கள் செல்வநாயகத்தை போய்ப் பார்த்தனர். . 34 நாட்கள் மரணத்துடன் போராடிய செல்வநாயகம், ஏப்ரல் 26-ந்தேதி 1977 நினைவு திரும்பாமலேயே மரணம் அடைந்தார். செல்வநாயகத்தின் மறைவுச் செய்தி இலங்கைத் தமிழர்களை மட்டுமில்லாமல் . தமிழகத்திலும் மற்றும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்களும் துயரம் அடைந்தனர்.

"திரு செல்வநாயகம் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர் தமிழ் பேசும் நல்லுலகின் வழிகாட்டி. ஈழம் வாழ் தமிழர்கள் தன்மானத்துடன் வாழ்வதற்கான வழி வகுத்திட்ட மாபெரும் தலைவர்'' என்று திரு . கருணாநிதி அஞ்சலி செலுத்தினார்.

"உலகத்தில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள் அனைவருக்குமாகப் போராடிய மேதை'' என்று திரு . எம்.ஜி.ஆர். தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார்.

சகோதர சகோதிரிகளே நன்றாக நோக்குங்கள்.
தமிழ் ஈழம் 110 வருடக்கணக்காக நடந்து வரும் ஒரு போராட்டம் . சுமார் 80 ஆண்டுகளாக ஜனநயாக வழியில் நடந்த போராட்டம் பின்பு 20 ஆண்டுகளாக ஆயுதம் ஏந்தி போராட்ட காலமாக மாறி , மூன்று தலைமுறைகளை கண்டு இன்று மறுபடியும் ஜனநாயக போராட்டமாக மிகவும் வலு பெற்று 2009 இல் நிகழ்த்திய இன படுகொலை காரணமாக இன்றைய @2012 ராஜபக்சே அரசுக்கு பெரும் நெருக்கடி நிலையினை தந்துள்ளது .

தமிழ் ஈழம் எந்த ஒரு தனி மனிதனும் , தனி இயக்கமும் சொந்த கொண்டாட முடியாதவை . Tamil Elam is an evolution process neither one man nor one point demand!

நிற்க .....

1964 இல் சுமார் 5.5 லட்சம் தமிழர்களை இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு அழைத்துக் கொள்வது என்று டெல்லியில் , இந்திய அரசும் , இலங்கை அரசும் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை திமுக 1964 இல் ஏன் எதிர்த்தது ?!

அரசியல் சாணக்கியர் என்று வருணிக்கபட்ட திரு ராஜாஜி அப்போது எந்த நிலையினை எடுத்தார் ??

எதற்காக 1955* இல் தொடங்கி 1990 வரை ஒன்றன் பின் ஒன்றாக இலங்கை அரசு தான் கையெழுத்து போட்ட ஒப்பந்தத்தை தானே ஏன் மீற வேண்டும் ?!!
நன்றி - முகநூலில் ச. வெ. ரா

https://www.facebook.com/photo.php?fbid=422085684484027&set=a.316997764992820.96277.100000477961699&type=1

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...